துளியும் வன்முறை இன்றி போராட்டம்… தமிழில் பேசி வாழ்த்து சொன்ன சேட்டன் மம்முட்டி
துளியும் வன்முறை இன்றி போராட்டம்… தமிழில் பேசி வாழ்த்து சொன்ன சேட்டன் மம்முட்டி
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தியும், மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் 5 நாட்கள் ஆகியும் இதுவரை முடிவுக்கு வரவில்லை. போராட்ட மாணவர்களுடன், அரசு சார்பில் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக சட்டம் இயற்றினால் மட்டுமே, போராட்டம் கைவிடப்படும் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.
கடந்த 16 ஆம் தேதி அலங்காநல்லுரில் தொடங்கிய இப்போராட்டம் இன்று இந்தியா மட்டுமல்ல உலகில் தமிழர்கள் எங்கெங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போராட்டம் வீறு கொண்டு பரவி வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, துத்துக்குடி,ஈரோடு என அனைத்துப் பகுதிகளிலும் உணர்ச்சிப் பெருக்குடன் நடைபெற்று வருகிறது.
அறவழியில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தைப் பார்த்து உலகமே வியந்து வருகிறது. நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், வட மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தமிழர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தைப் பார்த்து வியந்து போயுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தமிழில் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல்,எந்த ஒரு தலைவரின் துணையும் இன்றி,ஆண்,பெண் ஜாதிமத பாகுபாடின்றி,லட்சக்கணக்காண பேர் துளியும் வன்முறை இல்லாமல்,தமிழ்நாட்டில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய இந்த போராட்டம் இந்தியாவிற்கே ஒரு எடுத்துக்காட்டு.வாழ்த்துகள் தோழர்களே..!”என சுத்தமான தமிழில் பேசி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.