ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பணியின் காரணமாக வெளியூரில் இருப்பதால் விசாரணையி துவக்க ஒரு வாரம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி நடத்தப்பட்ட போராட்டங்களின் தொடர்ச்சியாக கடந்த 23. அன்று சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளின் உரிய காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விசாரிப்பதற்கு தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஓபிஎஸ் அறிவித்தார். 

இதன்படி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் விசாரணை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டார். ராஜேஷ்வரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.ராஜேஷ்வரன் இவ்விசாரணையை மேற்கொள்வார். இந்த விசாரணை ஆணையத்திற்கு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விசாரணை ஆணையம் தனது விசாரணையை முடித்து அரசிற்கு மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்கும் எனவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும் நியமிக்கப்பட்ட நீதிபதி விசாரணையை எப்போது துவக்குவார் உடனடியாக துவக்குவாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. 

ஆனால் விசாரணை ஆணைய தலைவர் ராஜேஷ்வரன் திருவனந்தபுரத்தில் இருப்பதால் அவர் சென்னை திரும்ப நான்கு நாட்களுக்கு மேல் ஆகலாம் என்று கூறப்படுகிறது. 

மேலும் விசாரணை ஆணைய அலுவலகம் , ஊழியர்கள் , வாகனம் அதற்கான செலவு , சம்பளம் போன்றவை குறித்து அரசாணை வெளியிடப்படவேண்டும். அதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதனால் ஆணைய விசாரணை தற்போதைக்கு துவங்க வாய்ப்பில்லை மேலும் ஒரு வாரம் ஆகலாம் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.