தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி கடந்த ஒரு வாரகமாக போராட்டம் வலுத்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் விடிய விடிய அலங்கநல்லூரில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் உள்பட 250க்கு மேற்பட்டோர் மீது தடியடி நடத்தி கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுவிக்க கோரியும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து நேற்று காலை முதல் சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கண்ட போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லுரிகளிலும் மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 500 பேர், திருத்தணி – அரக்கோணம் சாலையில் பேரணியாக செல்கின்றனர். அப்போது, பீட்டா அமைப்புக்கு தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டபடி செல்கின்றனர்.

சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி அருகே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர் போராட்டம் வலுத்துள்ளது. இதில், 75க்கு மேற்பட்ட மாணவிகள் உள்பட 200க்கு மேற்பட்டோர் பங்கேற்று மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்தும், பீட்டா அமைப்புக்கு தடை செய்ய வலியுறுத்தியும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரியும் கோஷமிட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 1800 பேர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி கோஷமிடுகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் பகுதியில் ஒரு செல்போன் கோபுரம் மீது ஏறிய 2 கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையே நீக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சமரசம் பேசி வருகின்றனர்.

ஆனால், அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி கோஷமிடுகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

கடலூரில் அனைத்து கல்லூரி மாணவர்கள் இணைந்து 1000க்கு மேற்பட்டோர் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் இன்று காலை திரண்டனர். அங்கு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி மத்திய மாநில அரசை கண்டித்து கோஷமிடுகின்றனர்.

தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தில் செயல்படும் தனியார் கல்லூரி மாணவர்கள், இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றனர். பின்னர், அனைவரும் ஒன்று திரண்டு கல்லூரி முன்பு சாலைக்கு திரண்டனர். அங்கு திடீரென ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி மத்திய மாநில அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது. அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அப்பகுதி மக்களும், வாலிபர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி மத்திய மாநில அரசை கண்டித்து, அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

சென்னை அருகே பள்ளிக்கரணை ஜெருசலேம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள், பள்ளிக்கரணை பஸ் நிலையம் அருகே தாம்பரம் – வேளச்சேரி சாலையில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தெரிவித்து, பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்திமத்திய மாநில அரசை கண்டித்து கோஷமிடுகின்றனர்.