“தடையை மீறி நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!!!” – மதுரையில் பரபரப்பு..!!
ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எனவே, ஜல்லிகட்டை நடத்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரை அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அலங்காநல்லூர் பிரிவில் மாடு பிடி வீரர்கள், மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைதொடர்ந்து, மதுரை மேலூர் அடுத்த கோட்டைபட்டியில் தடையை மீறி இன்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது.
மதுரை முனியாண்டி கோயிலில் நடைபெற்ற இந்த ஜல்லிகட்டில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பாக காணப்படுகிறது.