அவனியாபுரத்தில் அமைதியாக நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் திடீர் தடியடி நடத்தியதை அடுத்து கிடைத்த அனுபவத்தில் அலங்காநல்லூரில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் கூடியுள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகின்றனர்.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு வழக்கு தொடுத்து தடை வாங்கியது , உச்சநீதிமன்றமும் தடை விதித்தது , இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என கடுமையான போராட்டங்கள் நடைபெற்றது.

ஆனால் கடைசிவரை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று அறிவித்த மத்திய அமைச்சர்கள் ஏமாற்றினர். இதனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் , இளைஞர்களும் , மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்தனர்.
அவனியாபுரத்தில் நடந்த போராட்டத்தில் இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.நேற்று பாலமேட்டில் போலீசார் முன் கூட்டியே குவிக்கப்பட்டு இளைஞர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். போலீசார் குவிக்கப்பட்டு போராட்டம் நடத்த முடியாத அளவுக்கு சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து இன்று அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பத்தாயிரக்கணக்கில் இளைஞர்கள் திரண்டனர். இதனால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வாடிவாசலுக்குள் போராட்டக்காரர்கள் நுழையாமல் போலீசார் தடுக்க கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆயிரக்கணக்கில் கூடிய இளைஞர்கள் வரம்பு மீறாமல் இருக்க ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் , பாடகர் ஹிப்ஹாப் தமிழா ஆகியோரை பேசும்படி கேட்டு கொண்டனர். ஆனால் ஆவேசமாக இருக்கும் இளைஞர்களை அவர்களால் கட்டுபடுத்த முடியவில்லை.

அதிரடிப்படை , வெளிமாநில போலீசார் , உள்ளூர் போலீசார் என காவல்துறை களம் இறங்கி போராட்டக்காரர்களை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுது இருந்து திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களை , ஆர்வலர்களை அலங்காநல்லூருக்குள் விடாமல் வழியிலேயே தடுத்து நிறுத்தும் வேலையையும் போலீசார் செய்ததாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
போலீசார் ஒரு புறம் தடைகளை அமைத்து தடுத்து கொண்டிருக்க மறு புறம் தனியாக காளைகளை அவிழ்த்து விட்டு இளைஞர்கள் போராட்டத்தை நடத்தினர். காவல்துறையினர் எதிரிலேயே இது நடந்தது குறிப்பிடத்தக்கது.
மரத்தில் செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை கையில் ஏந்தி சுற்றி வந்தனர்.
