தமிழக அரசு இயற்றிய சட்டம் காரணமாக ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரசித்திபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 900 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்காரணமாக, ஜல்லிக்கட்டுக்கான தடை முற்றிலும் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுகிறது.அவனியாபுரம், திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள குருநாதன் கோயில் முன்புள்ள திடலில், வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்காக அவனியாபுரம் களைகட்டியுள்ள நிலையில், இதுவரை சுமார் 900 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கென கடந்த 3 நாட்களாக மருத்துவக் குழுவினர் முகாமிட்டு, காளைகளை பரிசோதித்து, சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர். மாடுபிடி வீரர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதனிடையே, அவனியாபுரம் ஜல்லிகட்டு முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். வாடிவாசல் பகுதி, காளைகள் நிறுத்தப்படும் இடம், பார்வையாளர்கள் பகுதி, தடுப்பு வேலிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அவனியாபுரத்தைத் தொடர்ந்து பாலமேட்டில் 9-ம் தேதியும், உலக பிரசித்திபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 10-ம் தேதியும் நடைபெறவுள்ளது.
