கலாஷேத்திர மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! உதவி பேராசிரியர் ஹரி பத்மன் திடீர் தலைமறைவு- தேடும் பணியில் போலீசார்
கலாஷேத்திர கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான புகாரில் உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கைது செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் ஹரி பத்மன் தலைமறைவாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
சென்னை திருவான்மியூர் உள்ள கலாஷேத்திரா வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பேராசிரியர்கள் உள்பட 4 பேர் பாலியல் துன்புறுத்தல்கள் செய்ததாக 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள்ளாக போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மகளிர் ஆணையம் சார்பாகவும், காவல்துறை சேர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. அரசைப் பொறுத்தவரை. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு,
குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், கலாஷேத்திரா விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை செய்து திங்கள் கிழமைக்குள் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி தெரிவித்துள்ளார்.
தூய்மை பணியாளர் தற்கொலை..! குற்றவாளிகள் கைது செய்யப்படுவதை யாராலும் தடுக்க முடியாது- கனிமொழி உறுதி
உதவி பேராசிரியர் தலைமறைவு
மேலும் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், கல்லூரி இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் நாளை (ஏப்ரல் 3) நேரில் ஆஜராக, மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் பாலியல் புகார் அளித்த மாணவியிடம் விசாரணை நடத்த அடையாறு போலீஸ் கேரளா சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடந்த 30 ஆம் தேதி மாணவ, மாணவிகளோடு ஹரி பத்மன் ஹைதராபாத் சென்றிருந்தார். இந்தநிலையில் இந்த பாலியல் வழக்கில் ஹரி பத்மனை இன்று போலீசார் கைது செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தலைமறைவாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்