பார் உரிமையாளர்களிடம் வசூல் வேட்டை? ராஜேஸ்வரி பிரியா மீது புகார்!
டாஸ்மாக் பார் உரிமையாளர்களிடம் பண வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக ராஜேஸ்வரி பிரியா மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தஞ்சாவூரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி பிரியா. இவர் சென்னை அருகே நீலாங்கரையில் தனது கணவருடன் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். அதில், நஷ்டம் அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து, தான் நடத்தி வந்த சூப்பர் மார்க்கெட் கடையை மூடிவிட்டு பாமக கட்சியில் ஐக்கியமாகி, மகளிரணி பொறுப்பை பெற்று வலம் வந்தார்.
அதன்பின்னர், பாமகவில் இருந்து விலகி அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அக்கட்சியின் தலைவராக இருக்கும் ராஜேஸ்வரி பிரியா, ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபான கடை பார் உரிமையாளர்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு, டாஸ்மாக் மதுபான கடைகள் குறித்த தகவல்கள் சேகரித்து மிரட்டல் விடுத்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், டாஸ்மாக் கடைகள் மூடச் சொல்லி சாலை மறியல் போராட்டங்களையும் அவர் நடத்தியுள்ளதாக தெரிகிறது.
கறுப்பு உடை சர்ச்சை.. பெரியார் பல்கலைஅறிவிப்பை வாபஸ் பெற்றாலும் சேலத்தில் பதற்றம்.. என்ன காரணம்?
ராஜேஸ்வரி பிரியாவின் முழு நேர அரசியலே கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் என அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் பார் உரிமையாளர் ஜான் என்பவருடன் கூட்டு சேர்ந்து கொண்டு, முன்னாள் அமைச்சர் ஆட்களுடன் சேர்ந்து கொண்டு மற்ற பார் உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலிக்கும் செயல்களில் அவர் ஈடுபட்டு வந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், சபாநாயகர் அப்பாவு மகன் தனக்கு நெருக்கமானவர் என கூறி மற்றவர்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில், டாஸ்மாக் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ராஜேஸ்வரி பிரியா மதுபான பார் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பதாக தெரியவந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, கடந்த 17ஆம் தேதியன்று நீலாங்கரை காவல் நிலையத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட டாஸ்மாக் மதுபான மேலாளர் ஷியாம் சுந்தர், ராஜேஸ்வரி பிரியா மீது புகார் அளித்துள்ளதாகவும், அதன்பேரில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, லியோ படத்தில் விஜய் பாடிய நா ரெடி பாடலை கடுமையாக விமர்சித்திருந்த ராஜேஸ்வரி பிரியா, அந்த பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.