தீவிரமடையும் ஜாக்டோ ஜியோ போராட்டம்… தலைமை செயலக ஊழியர்களும் இன்று முதல் வேலைநிறுத்தம்..!
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் புதிய ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 7-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த அமைப்பின் ஒரு சாரார் பணியை தொடர்ந்து வரும் நிலையில், மற்றொரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்களும் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நேற்று பணியின்போது கருப்புச்சட்டை அணிந்தும் சட்டையில் கருப்புக்கொடி அணிந்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதையடுத்து முதலமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டத்தை தள்ளிப்போடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதை அடுத்து இதுகுறித்து முடிவெடுப்பதற்காக நாமக்கல் கவிஞர் மாளிகையில் தலைமை செயலக ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டப்பட்டது.
அப்போது, அரசின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தள்ளிவைக்கலாம் என சங்க தலைவர் கணேசன் தெரிவித்ததால் அங்கு சலசலப்பு உண்டானது. கணேசனின் கருத்தை ஏற்க மறுத்த தலைமை செயலக ஊழியர்கள், ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக இன்று முதல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
போராட்டத்தின் வடிவம் குறித்து இன்று அறிவிக்கப்படும். போராட்டத்தின் வடிவம் எதுவாக இருந்தாலும் போராட்டம் உறுதி என்பதால் அரசுப் பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது.