சென்னையில் மாணவர்கள் போராட்டம் இவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்று முன்னாள் காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது...

ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திரளும் மாணவர்கள் போராட்டம் பெரியதாக வெடித்துள்ளது.

தலைநகர் சென்னையிலே பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள் கூடியதும் போலீசார் அதை தடுக்க முடியாமல் கையை பிசைந்து நிற்பதும் உளவுத்துறையின் தோல்வியையே காட்டுவதாக முன்னாள் காவல்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜல்லிகட்டுக்கு எதிரான தடையை நீக்கவேண்டுமென்று கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பதற்கான சூழ்நிலைகள் இருந்துவந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வராத பட்சத்தில் மாணவர்களின் போராட்டம் பெரிதாக வெடித்து கிளம்பும் என்பது சாதாரண பொதுமக்களுக்கும் தெரிந்த விஷயம்.

உணர்வுமிக்க இந்த விவகாரத்தில் இளைஞர்கள் எந்தளவுக்கு கொந்தளித்து எழுவார்கள், போராட்டம் எப்படி பெரிதாகும் என்பதை கணித்து அதற்கேற்ப அறிக்கையை உளவுத்துறை அளித்திருக்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக அலங்காநல்லூர் போராட்டத்தை போலீசார் கையாண்ட விதம் தமிழகம் முழுவதும் பெரிய எதிர்ப்பலையை இளைஞர்கள் தானாக போராட்டத்தில் குதிக்கின்ற ஒரு நிலையை ஏற்படுத்தியது.

அலங்காநல்லூர் போராட்டத்துக்கு மறுநாள் தலைநகர் சென்னையில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் கூடவுள்ளனர்.

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில் இளைஞர்கள் கூடுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்பதை உளவுத்துறை போலீசார் கணிக்க தவறியது சென்னையில் மிகப்பெரிய மாணவர்கள் போராட்டம் நடக்க காரணமாக அமைந்தது.

நேற்று காலையிலேயே மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்த்திருந்தால் இன்று அது மிகப்பெரிய போராட்டமாக மாறியிருக்காது.

தலைநகர் சென்னையிலேயே மிகப்பெரிய போராட்டம் என்பது தமிழகத்தையே அசைத்து பார்த்துள்ளது.

இதை உளவு துறையின் தோல்வியென்று கருதலாம்.

அனுபவமிக்க சென்னை ஆணையர் இதை இன்னும் சரியாக கையாண்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.