கை அகற்றப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை உயிரிழந்துள்ளது

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது மகனுக்கு தலையில் நீர் கோர்த்த பிரச்சினை காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரது குழந்தையை அனுமதித்தார். குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போடப்பட்ட நிலையில், குழந்தையின் கை கருப்பாக மாறியுள்ளது. தொடர்ந்து அக்குழந்தையின் கை மேலும் அழுகியதால், குழந்தையின் கையை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தையின் கை அகற்றப்பட்டது. ஆனால், மருத்துவர்களின் அலட்சியத்தால் தங்களது குழந்தையின் கை அகற்றப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.

ஆளுநர் மாளிகையில் இரவு விருந்து: ஸ்டாலின் பங்கேற்கிறார்!

இந்த சம்பவம் குறித்து விசாரணை குழு அமைத்திருப்பதாகவும், தவறு ஏற்பட்டு இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அக்குழுவின் அறிக்கையில், இரத்த ஓட்டம் பாதித்ததால் குழந்தையின் உயிரைக்காப்பாற்ற வலது கையை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கை அகற்றப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை உயிரிழந்துள்ளது. கை அகற்றப்பட்ட நிலையில், அக்குழந்தைக்கு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அக்குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இன்று உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.