குட் நியூஸ் ! 10, 11, 12 பொதுத்தேர்வு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!
தமிழகத்தில் 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் :
10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 10,11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் எழுதும் தனித்தேர்வர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது அறிவித்துள்ளது.
தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதற்காக அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் வாயிலாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து 16 ஆம் தேதி வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கடைசி தேதியான 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் மார்ச் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தட்கல் முறையில் விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்புக்கு ரூ.500, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு ரூ.1,000 தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ? :
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம். இதை அடுத்து 10,11, 12ஆம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தனித்தேர்வர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.