ஓபிஎஸ் க்கு நெருங்கிய நண்பர் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை - 90 கோடி பணமும் 100 கிலோ தங்கமும் பறிமுதல்…
உயர்மதிப்பு கொண்ட பணம் மதிப்பிழந்ததை அடுத்து பழைய ருபாய் நோட்டுக்களை மாற்ற பொதுமக்கள் கடந்த 2 ஆம் தேதி வரை வங்கிகள் முன்பு வரிசையில் நின்றனர். இதில் தொடர்ந்து முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து ருபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு புதிய நிபந்தனைகளை விதித்த்து. ஆனாலும் இதில் பல முறைகேடுகள் நடப்பதை அறிந்த வருமான வரித்துறை பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்,
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வத்தின் நெருங்கிய நண்பரும், தொழிலதிபருமான திரு சேகர் ரெட்டி மற்றும் சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று அதிரடியாக புகுந்த வருமான வரிதுறையினர் சோதனை மேற்கொண்டனர், அண்ணாநகர் மற்றும் தியாகராயர்நகர் உள்ளிட்ட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் போது, 90 கோடி ரூபாய் ரொக்கமும், 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளும்,தங்கமும் மாற்றித் தந்த்து இந்த சோதனையின் போது அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தின் முதலமைச்சராக ஒபிஎஸ் பதவியேற்ற மூன்றாவது நாளிலேயே மோடி அரசின் வருமான வரித்துறை அவரது நெருங்கிய நண்பர் வீட்டில் சோதனை நடத்தியிருப்பது ஆளுங்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.