‘கசானா ஜூவல்லரியில 50 கிலோ!’, ‘பிரின்ஸ் ஜுவல்லரியில 50 கிலோ!’ அவருக்கு எதுக்கு 55 கோடி கொடுத்தீங்க? இன்ச் இன்ச்சா நோண்டும் இன்கம் டாக்ஸ்!
எஸ்பிகே குழுமத்தில் 30க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். நேற்றைய சோதனையில் கணக்கில் காட்டப்படாத 180 கோடி ரொக்கப்பணமும், 150 கிலோ தங்கமும் சிக்கியதாக தகவல். மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த பணத்தையும், பெட்டி பெட்டியாக அடிக்கி வைக்கப்பட்டிருந்த தங்கத்தையும் பார்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். ’ஆபரேஷன் பார்க்கிங் மனி’ என்ற பெயரில் கார்களில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப்பணத்தை கைப்பற்றி வருகின்றனர்.
ஆனால் உண்மையிலேயே பறிமுதல் செய்யப்பட்டது தற்போது கைப்பற்றியதாக வெளிவந்துள்ளதை விட பல மடங்கு அதிகம் என்கிறார்கள்.
இந்த சோதனையில் இறுதிகட்ட சம்பவம் நேற்று நடந்துள்ளது. ரெய்டுக்குப் போன அத்தனை அதிகாரிகளும் நாகராஜனை கேள்விகளால் ஒரு ரெய்டு நடத்திவிட்டார்கள். இந்த ஆபரேஷனில் ஈடுபட்ட சுமார் 25 வருமான வரித்துறை அதிகாரிகளும் நாகராஜன் கேள்விகளால் துளைத் தெடுத்துள்ளனர். ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் சோதனையில் கிடைத்த பணம், தங்கம் பற்றி நாகராஜனிடம் அடுக்கடுக்கள கேள்விகளால் திணரடித்துள்ளனர்.
சில அரசியல் புள்ளிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளில் பெயரையும் சொல்லி, ‘அவருக்கு எதுக்கு 25 கோடி?, இவருக்கு எதுக்கு 55 கோடி ?’ என கேள்விகள் கேட்க, நாகராஜன் முதலில் சிலவற்றை மறுத்திருக்கிறார். பிறகு அதிகாரிகள் ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக் காட்டியதால், ‘ஆமா சார்... அது என் பணம்தான்’ என பயத்தில் சொல்லியுள்ளார்.
இதனையடுத்து தொடர்ந்து நடந்த விசாரணையில், ‘கசானா ஜூவல்லரியில 50 கிலோ தங்கம் எதுக்காக வாங்கினது ?’ என்றொரு கேள்வி, ‘பிரின்ஸ் ஜுவல்லரியில 50 கிலோ தங்கம் எப்போதுவாங்கினது?’ என்ற கேள்விகளால் கலங்கிவிட்டார் நாகராஜன். அத நான் வாங்கல என சொல்ல அதிகாரிகளின் கிடுக்குப்பிடி கேள்விகளால் நாகராஜன் எதையுமே அவர் மறுக்க முடியவில்லை.
‘இவ்வளவு பணம் எங்கிருந்து வந்துச்சு? யாருக்கு கொடுக்க யாரு கொடுத்தாங்க என்பதை சொல்லிட்டா உங்களை விட்டுடுறோம். இல்லென்னா... இருபது மடங்கு, அம்பது மடங்கு ஃபைன் போடுவோம். அதையெல்லாம் கட்றதுக்கு உங்க மொத்த சொத்துகளையும் வித்தா கூட உங்களால சமாளிக்க முடியாது. சொத்துகளை மொத்தமா எடுத்துப்போம்’ என்று வருமான வரித்துறை மிரட்டவே நாகராஜன் பயத்தில் மொத்தமாக உளறியிருக்கிறார்.