வெறிநாய்கள் கடித்ததில் எல்.கே.ஜி மாணவன் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம்; புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை...
அரியலூர்
அரியலூரில், வெறிநாய்கள் துரத்தி கடித்ததால் எல்.கே.ஜி மாணவன் உள்பட இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், விளாங்குடி மற்றும் வி.கைகாட்டி பகுதிகளில் வெறிநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இந்த வெறிநாய்கள் கடந்த வாரத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளன. இதனால், காயமடைந்தவர்கள் சிக்சிசை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் வெறிநாய்கள் துரத்தியதில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பலர் காயமடைந்தனர்.
இதனால் மிகுந்த அச்சத்தில் உள்ள இப்பகுதி மக்கள், அந்த தெருநாய்களை பிடிக்குமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்துள்ளனர். ஆனால், ஒருமுறை கூட இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், ரெட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.கைகாட்டியில் சாலையில் நடந்து சென்ற எல்கேஜி மாணவர் நவீன் மற்றும் ராதா என்ற பெண்ணை வெறிநாய் துரத்திக் கடித்துள்ளது. இதனால் அவர்கள் காயமடைந்தனர். அவர்களை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனே இதில் தலையிட்டு வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.