தேர்தல் அதிகாரியை காருடன் சிறைப்பிடித்த விடுதலை சிறுத்தைகள்; போலி உறுப்பினர்களால் பரபரப்பு...
தேனி
வத்தலக்குண்டுவில் 250-க்கும் மேற்பட்டவர்களை கூட்டுறவு வங்கி உறுப்பினர்களாக போலியாக சேர்த்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட தேர்தல் அதிகாரியை காருடன் சிறைப்பிடித்து போராடினர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் உள்ள கூட்டுறவு பண்டக சாலை, வத்தலக்குண்டு கூட்டுறவு நகர வங்கி, விராலிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், விருவீடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றிற்கான தேர்தலுக்கு நேற்று வேட்பு மனு தாக்கல் நடைப்பெற்றது.
இதில், அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நில உரிமை மீட்பு மாநில துணைப் பொதுச் செயலாளர் உலகநம்பி வத்தலக்குண்டு கூட்டுறவு நகர வங்கி இயக்குனர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று அங்கு சென்றார்.
அவருடன் அவரது தம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளருமான திருமாசெழியனும் சென்றார். உலகநம்பி அங்கிருந்த வங்கி உறுப்பினர்கள் பெயர் பட்டியலை பார்த்தார்.
அப்போது அவரது தம்பி திருமாசெழியன் மற்றும் பெத்தானியபுரத்தைச் சேர்ந்த 250 பேரின் பெயர்கள் அவர்களுக்கு தெரியாமலே போலியாக 2013-ஆம் ஆண்டு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர்கள் தேர்தல் அதிகாரி சௌந்தரராஜனிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் கூட்டுறவு பண்டக சாலைக்கு வந்துள்ளார். அவரிடம் கேளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உலகநம்பி மாவட்ட தேர்தல் அதிகாரி இருந்த கூட்டுறவு பண்டக சாலைக்கு சென்று அவரிடம் கேட்டனர். அதன்பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் அவர்களிடம் புகார் மனு வாங்கி கொண்டு காரில் ஏறி புறப்பட முயன்றார். அப்போது உலகநம்பி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காரின் முன்பு உட்கார்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.
அப்போது, அவர்கள் தேர்தல் நடக்கும் 7-ஆம் தேதிக்கு முன்னர் போலியான உறுப்பினர் பெயர்களை நீக்க வேண்டும் என்பதற்கு உறுதி மொழி எழுதி தரவேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் கூறினர்.
அதற்கு அவர் மேலதிகாரியிடம் சொல்லி விரைவான நடவடிக்கை எடுக்க சொல்கிறேன், எழுதி தர முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.
இதனையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவரை காருடன் சிறைப் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிற்பகல் 4 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டம் மாலை 6 மணி வரை நீடித்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.