மக்களே உஷார்..! டெங்குவை வைத்து பணம் சம்பாரிக்கும் பரிசோதனை மையங்கள் - போலி ரிப்போர்ட் கொடுத்தது அம்பலம்...!
திருச்சியில், சாதாரண காய்ச்சலுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக சான்றிதழ் வழங்கிய தனியார் ரத்த பரிசோதனை மையத்துக்கு நோட்டீஸ் அனுப்பபடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி உறையூரில் தனியார் ரத்த பரிசோதனை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் பெரும்பாலானவை டெங்கு இருப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பிய வண்ணம் இருந்தனர்.
இதையடுத்து மாநகராட்சி நகர்நல அலுவலர் சித்ரா தலைமையிலான மருத்துவக்குழுவினர் குறிப்பிட்ட மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், காய்ச்சல் பாதிப்பால் வந்த நோயாளிகளுக்கு பரிசோதனை முடித்து வழங்கப்பட்ட அறிக்கையில் பெரும்பாலானவை டெங்கு அறிகுறி இருப்பதாக வழங்கப்பட்டுள்ளதும், டெங்கு பரிசோதனை மேற்கொள்ள ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து நகர்நல அலுவலர் டாக்டர் சித்ரா கூறுகையில், நடத்தப்பட்ட ஆய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், இந்த மையத்தில் டெங்கு பரிசோதனை அறிக்கை வழங்கப்பட்டதில் ஏற்பட்ட விதிமீறல் குறித்து விளக்கம் கேட்டு மையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அவர்கள் அளிக்கும் விளக்கத்தை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.