மனிதாபிமான அடிப்படையில் நளினியை விடுவிக்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம்..!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதைதொடர்ந்து 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் தந்தையின் உடல்நலத்தை காட்டி இரண்டு மாதத்திற்கு முன்பு பரோலில் வெளியே சென்றார்.
ஒரு மாதமாக இருந்த பரோல் 2 மாதமாக நீட்டிக்கப்பட்டது. பின்னர் கடந்த மாதம் மீண்டும் சிறைக்கு திரும்பினார்.
இதேபோல், 26 ஆண்டுகளாக சிறையில் இருப்பதை கருதி, மனிதாபிமான அடிப்படையில் தன்னை விடுவிக்க உத்தரவிடக் கோரி, நளினி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
1994ம் ஆண்டு அரசாணைப்படி 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கலாம் என்று நளினி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதற்கு உரிய பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில், உயர்நீதிமன்றத்தில் இன்று பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் நளினி உள்ளிட்டோரை விடுவிப்பதற்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுவிக்க முடியாது என்று கூறியுள்ளது.