In the car that the son bought the daughter-in-law goes? An in-law who set fire to the car!

ஒரு பெண்ணுக்கு மாமியார் இரண்டாவது அம்மா என்று கூறுவார்கள். ஆனால், மாமியார் - மருமகள் இடையிலான அந்த உறவு ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். தான் ஆசையாக வளர்த்த மகன், தன்னை கவனிக்காமல் மருமகளை (மனைவியை) கவனிப்பது சிலருக்கு, எங்கே தன்னை விட்டு மகன் சென்றுவிடுவானோ ஏக்க உணர்வையும், பொறாமையையும் ஏற்படுத்துகிறது.

சிறு வயதில் தந்தை அல்லது சகோதரன், திருமணத்துக்குப் பிறகு கணவன் என ஆண்களை சார்ந்து வாழ, பெண்களை பழக்கப்படுத்தி உள்ளது இந்த சமூகம். மருமகள் வந்த பிறகு, எங்கே தனது மகன் தன்னை விட்டு போய்விடுவானோ என்ற எண்ணத்தில் மருமகளுக்கு பல்வேறு, டார்ச்சர்களை மாமியார்கள் கொடுத்து வருவதை நாம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து வருகிறோம். அதே நிலையில், மருமகள் மாமியாருக்கு அளித்து வரும் டார்ச்சரையும் நாம் படித்து வருகிறோம். 

மருமகள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால், மகன் வாங்கிய காருக்கு தீவை சம்பவம் ஒன்று சென்னை ஆவடியில் நடந்துள்ளது. மகன் வாங்கிய காரில் மருமகள் செல்லக்கூடாது என்று மாமியார் ஒருவர் காருக்கு தீ வைத்துள்ளார். சென்னை, ஆவடி, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது தாய் இந்திராணி. ராஜேந்திரன், மனைவி இந்திராணியுடனும், தாயுடனும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

ராஜேந்திரன் வீட்டிலும், மாமியார் - மருமகளிடையே பிரச்சனை எழுந்தது. இதனால், இந்திராணி, ராஜேந்திரன் - வைஜெயந்திமாலைவை தனியாக குடித்தனம் வைத்துள்ளார். இந்த நிலையில் ராஜேந்திரன் புது கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

தன்னுடன் சண்டையிட்ட மருமகள், மகன் வாங்கிய காரில் உட்கார்ந்து செல்வது இந்திராணிக்கு பிடிக்கவில்லை. இதனால் அந்த காருக்கு தீ வைத்து கொளுத்த திட்டமிட்டார். நேற்று மகன் வீட்டுக்கு வந்த இந்திராணி, வீட்டுக்கு வெளியே நின்றிருந்த காருக்கு தீ வைத்துள்ளார். இதில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. 

கார் தீப்பற்றி எரிந்தது குறித்து, அருகில் இருந்தோர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர், பின்னர் அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர். மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தியதாக போலீசார் நினைத்தனர். இதனைக் கண்டுபிடிக்க அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். 

ஆனால், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்த போலீசாரும், ராஜேந்திரனும், வைஜெயந்திமாலாவும் அதிர்ச்சி அடைந்தனர். மண்ணெண்ணெய் கேனுடன், இந்திராணி, கார் அருகே செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து, இந்திராணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, காருக்கு தீ வைத்ததை இந்திராணி ஒப்புக் கொண்டார்.

மருமகளிடம் இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக, மகன் வாங்கிய காருக்கே தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.