in perambalur 18 thousand 561 applicants for Group-4 exam
பெரம்பலூர்
பெரம்பலூரில் மட்டும் நாளை நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கு 18 ஆயிரத்து 561 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்- 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை (அதாவது நாளை) நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு, தேர்வு முன்னேற்பாடுகள், தேர்வுக்கு பணியமர்த்தப்படும் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியது:
"பெரம்பலூர் மாவட்டத்தில் 61 மையத்தில் 18 ஆயிரத்து 561 நபர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இந்தத் தேர்வுக்கு 61 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 15 நடமாடும் குழுவினருக்கு தேர்வு குறித்து பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களுக்கு குடிநீர் வசதி, சிறப்பு பேருந்து வசதி மற்றும் தேர்வு நடைபெறும் மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
61 முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தேர்வுக் கூடங்களில் அரசு விதிகளைப் பின்பற்றி எந்த அசம்பாவிதங்களும் நிகழாத வகையில் தேர்வை சிறப்பாக நடத்தித் தர வேண்டும்.
இந்தத் தேர்வை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 7 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது" என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சேதுராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
