ஜெயா டிவி.,யில் முக்கிய ஆவணங்கள் கிடைச்சுதாம்... ஐ.டி. அதிகாரிகள் சொல்கிறார்கள்...
வியாழக்கிழமை இன்று தமிழகத்தில் சசிகலா குடும்பத்தினர் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள், இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெயா டிவி.,யில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பல சிக்கியுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் பரவலாக போயஸ் கார்டன் தொடங்கி, கொட நாடு எஸ்டேட் வரையிலும், ஜெயா டிவி தொடங்கி சென்னை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் எல்லாம் சசிகலா குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வியாழக்கிழமை இன்று காலை 6 மணிக்கு துவங்கியது சோதனை. தொடர்ந்து 14 மணி நேரத்துக்கும் மேலாக இரவு 8 மணியைக் கடந்தும் சோதனை பல இடங்களில் நீள்கிறது. சில இடங்களில் சோதனை நிறைவுற்றதாக அதிகாரிகள் கூறினர்.
இந்தச் சோதனையில் இந்தியா முழுதும் பரவலாக அதிகாரிகள் ஈடுபடுத்தப் பட்டனர். ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனராம். இந்தச் சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறிய போது, “ஜெயா டிவியில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது என்றனர்.
இது போல், மிடாஸ் உள்ளிட்ட பல இடங்களில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் கூறியுள்ளார்.