‘பர்ஸை’ மறந்துட்டுபோனா, செல்போன் ஞாபகப்படுத்துமா?... சென்னைக்கு வந்து விட்டது ‘ஸ்மார்ட் வாலட்’
நம்முடைய பர்ஸை எங்காவது மறந்துவைத்து விட்டால், இனி தேடத் தேவையில்லை. அந்த பர்ஸில் பொருத்தப்பட்டுள்ள சிறிய சிப் மூலம் அது எங்கிருக்கிறது என்பதை செல்போன் உணர்த்திவிடும்.
இத்தகைய சிறப்பு அம்சம் கொண்ட ‘ஸ்மார்ட் வாலட்’, சென்னைக்கே வந்துவிட்டது.
சென்னையைச் சேர்ந்த ‘கியுர் அலே’(Cuir Ally) என்ற நிறுவனம் இந்த ‘ஸ்மார்ட் வாலட்’டை உருவாக்கியுள்ளது. இந்த வாலட்டில் உள்ள ஸ்மார்ட் சிப், நாம் வைத்து இருக்கும் ஸ்மார்ட்போனின் ப்ளு டூத்’தோடு இணைந்து செயல்படும் தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘கியுர் அலே’ நிறுவனத்தின் தலைவர் சத்தயராஜ் கூறுகையில், “பியுலாட்ரீம் .காம்(Fueladream.com) என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தஸ்மார்ட் வாலட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாலட்டில் பொருத்தப்பட்டுள்ள ‘ஸ்மார்ட் சிப்’ மூலம், ஸ்மார்ட்போனை இணைத்து பயன்படுத்த முடியும். இதன் மூலம் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கோ, அல்லது வேறு எங்கோ வாலட்டை எடுக்காமல் புறப்பட்டால் உடனுக்குடன் ஸ்மார்ட்போன் அலாரம் கொடுத்தும் ஞாபகப்படுத்தும். மேலும் ஸ்மார்ட்சிப் பொருத்தப்பட்டுள்ளதால், உங்கள் ஸ்மார்ட்போன் எங்காவது வீட்டில் ‘சைலன்ட் மோட்’ இருந்தால் கூட கண்டுபிடிக்க முடியும்.
இந்த ஸ்மார்ட் வாலட் கருப்பு, பிரவுன், நீலம் ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்த வசதிகளைத் தவிர்த்து, இந்த வாலட் மூலம் செல்பி எடுத்துக்கொள்ள முடியும். கார்டுகள் வைக்கக்கூடிய இடம், வாலட்டிலேயே பேனாவும், சிறியநோட்புக் வைக்க இடம், பாஸ்போர்ட் வைக்க இடம் தரப்பட்டுள்ளது. மேலும், ‘சிம் கார்டு’ மற்றும் ‘சிம் டூல்’ வைக்கவும் இதில் இடம் தரப்பட்டுள்ளது.
இதன் விலை ரூ.2,100 ஆகும்’’ எனத் தெரிவித்தார்.