மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்கு வராது - பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டம்...
ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் நன்மை தீமைகளை மத்திய அரசு எடுத்து சொல்லும். அப்போதும் மக்கள் விரும்பாவிட்டால் இந்த திட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்படாது என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், சினிமா பிரபலங்கள், என ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமண்டைந்து கொண்டே செல்கிறது. மேலும் பல்வேறு விதமாக போராட்டத்தை கொண்டு செல்ல அப்பகுதி கிராம மக்கள் தீர்மானகள் நிறைவேற்றியுள்ளனர்.
இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லி சென்று பிரதமர் மோடியை நேராக சந்தித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார்.
அப்போது, ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்தும் அதற்கு மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்தும் பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏதேனும் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதா? என அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார்.
மக்கள் விரும்பாவிட்டால் திட்டத்தை செயல்படுத்த விரும்ப மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு திட்டம் கொண்டுவரப்படும்போது, அது நல்லதா கெட்டதா என மக்கள் ஆராய வேண்டும்.
நன்மையாக இருந்தால் வரவேற்போம். கெட்டதாக இருந்தால் விலக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.