I will take action on private sugar mills - Minister Voices ...

கடலூர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தனியார் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை தராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம், கோண்டூர் ஊராட்சி குறிஞ்சிநகர், நத்தப்பட்டு ஊராட்சி பொதிகை நகர் ஆகிய இடங்களில் பசுமை இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “கரும்புக்கான நிலுவைத் தொகையை இன்னும் தனியார் சர்க்கரை ஆலைகள் கொடுக்கவில்லை. இதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்க்கரை விலை குறைவாக இருந்ததாக ஆலை நிர்வாகங்கள் கூறி வந்தது.

தற்போது சர்க்கரை விலை உயர்ந்து உள்ளது. ஆகவே, தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் நிலுவையில் உள்ள தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

மேலும், இது தொடர்பாக வேளாண்துறை, தொழில்துறை செயலாளர்கள், அதிகாரிகள் முன்னிலையில் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினரிடம் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் நிலுவை தொகையை வழங்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

இந்த விழாவில் அதிமுக நகரச் செயலாளர் குமரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் சேவல்குமார், நகர துணைச் செயலாளர் கந்தன், ஒன்றியச் செயலாளர்கள் பழனிச்சாமி, முத்துக்குமாரசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வன், அன்பு, சேகர், மாவட்டப் பிரதிநிதி வெங்கட்ராமன், குறிஞ்சி நகர் நலச் சங்கத் தலைவர் கண்ணன், கடலூர் அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் வெங்கடேசன், பொதுச் செயலாளர் மருதவாணன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் நிஜாமுதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.