முன்னாள் மனைவியின் காதலனை நகவெட்டி கத்தியால் குத்திக் கொன்ற கணவன்; மனைவி சந்தோசமாக இருப்பது பிடிக்காததால் வெறிச்செயல்...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் நண்பர்களுடன் முன்னாள் மனைவி கொடுத்த சாராய விருந்தில் கலந்து கொண்ட கணவன், மனைவியின் காதலனை நக வெட்டியில் உள்ள கத்தியால் இதயத்தில் குத்திக் கொன்றேன் என்று வாக்குமூலம் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலைச் சேர்ந்தவர் செந்தில்ராஜ் (42). இவர், பல் மருத்துவம் முடித்துவிட்டு, உடலில் பச்சை குத்தும் ‘டாட்டு ஸ்டூடியோ’ ஒன்றை நடத்தி வருகிறார்.
அதேப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர்.
இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்ற பின்னும், நண்பர்களாக பழகிவந்த நிலையில் செந்தில்ராஜின் முன்னாள் மனைவிக்கும், அவர் கிண்டியில் நடத்தி வரும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த சஞ்சீவ்ராஜ் (33) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
அதன்பிறகு சஞ்சீவ்ராஜ், வேறொரு நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இருந்தும், இவர்களின் பழக்கம் தொடர்ந்தது. இது செந்தில்ராஜ்க்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், செந்தில்ராஜின் முன்னாள் மனைவி, தனது நண்பர்கள், குடும்பத்தினருக்கு மாமல்லபுரத்தில் புத்தாண்டை முன்னிட்டு விருந்து வைக்க முடிவு செய்தார். இந்த விருந்துக்கு தனது முன்னாள் கணவர் செந்தில்ராஜ், தற்போதைய காதலன் சஞ்சீவ்ராஜ் மற்றும் நண்பர்கள், குடும்பத்தினர் என 20 பேருடன் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் கடற்கரை ஓரம் உள்ள தனியார் விடுதியில் ஐந்து அறைகள் எடுத்துத் தங்கினார்.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் விடுதியில் அனைவரும் சாராயம் குடித்துவிட்டு போதையில் இருந்தனர். அப்போது, போதை தலைக்கேறி இருந்த செந்தில்ராஜ், தனது முன்னாள் மனைவின் காதலன், சஞ்சீவ்ராஜை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதுகுறித்து தகவலறிந்த காவலாளர்கள் செல்வராஜை கைது செய்தனர். கொலையாளி செந்தில்ராஜ், மாமல்லபுரம் காவலாளர்களிடம் அளித்த வாக்குமூலம்:
"எனது முன்னாள் மனைவியும், சஞ்சீவ்ராஜூம் காதலித்து வந்தது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால், புத்தாண்டை கொண்டாட சாராய விருந்துக்கு வரும் அவரை கொலை செய்ய முடிவு எடுத்தேன்.
மருத்துவம் படித்து இருந்ததால் அவரை எப்படி கொல்வது என்ற வியூகம் வகுத்தேன். சாராய விருந்தின்போது நான் அங்கு சாராயம் குடித்துக் கொண்டிருந்தேன். என் அருகில் அதிக போதையில் சஞ்சீவ்ராஜ் அமர்ந்திர்ந்தார்.
திட்டமிட்டபடி நான், நக வெட்டியில் உள்ள சிறிய கத்தியால் அவரது இதயத்தில் குத்தினேன். இதயத்தில் குத்தினால் உடனடியாக இறப்பார் என திட்டம் போட்டு அதை செயல்படுத்தினேன். என்னுடைய திட்டம் நிறைவேறியது. அவர் இரத்த வெள்ளத்தில் இறந்துவிட்டார்" என்று அவர் வாக்குமூலம் கொடுத்திருந்தாராம்.
பின்னர் கைதான செந்தில்ராஜ் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.