Asianet News TamilAsianet News Tamil

மனைவி இறந்ததை கேட்டு துக்கத்தில் கணவரும் இறப்பு... 40 ஆண்டுகால திருமண உறவை இறப்பிலும் தொடர்ந்த ஜோடி...

husband died hearing about wife death
husband died hearing about wife death
Author
First Published May 4, 2018, 7:02 AM IST


நாமக்கல்

நாமக்கல்லில் மனைவி இறந்த செய்தியை கேட்ட கணவன் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (62). வியாபாரியான இவர் குமாரபாளையம் மேற்கு காலனியில் மெத்தை மற்றும் தலையணை தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவருடைய மனைவி மல்லிகா (58). 

இவர்களுக்கு திருமணமாகி 40 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு அங்குராஜ் என்ற மகனும், துளசி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

இந்த நிலையில் ஆறுமுகம், தனது மனைவி மல்லிகாவை அழைத்துக் கொண்டு மொபட்டில் பள்ளிபாளையத்தில் உள்ள மகள் துளசி வீட்டுக்குச் சென்றார். பின்னர் ஈரோடு சென்றுவிட்டு வருவதாகவும், வரும்போது பேரன் பேத்திகளை குமாரபாளையம் அழைத்துச் செல்வதாகவும் கூறி சென்றுள்ளனர். 

அங்கிருந்து சிறிது தூரம் சென்றவுடன் மொபட்டில் கணவருடன் சென்ற மல்லிகா திடீரென மயக்கமடைந்தார். உடனே அங்குள்ள தனியார் மருத்துவமனையில் மல்லிகா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்தபோது மல்லிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மகன் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகன் அங்குராஜ் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். 

அப்போது ஆறுமுகம் தன்னைவிட்டு மனைவி போய்விட்டாளே என்று கதறி அழுதார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவரும் இறந்துவிட்டார்.

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தம்பதி மறைவுக்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும் கண்கலங்கினர். 

இதனையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இருவரின் உடல்களையும் எடுத்துச் சென்று குமாரபாளையத்தில் அடக்கம் செய்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios