மனைவியை குத்தி கொன்றுவிட்டு தலைமறைவான கொடூர கணவன்; போலீஸ் வலைவீச்சு...
சிவகங்கை
சிவகங்கையில் மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தலைமறைவான கொடூர கணவனை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் கஸ்தூரி பாய் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (35). இவர், அதே பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (28). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கணவர், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தமிழ்ச்செல்வி சாலைக்கிராமம் அருகே வலசைக்காட்டில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை காளையார்கோவிலில் உள்ள கணவர் வீட்டிற்கு பிள்ளைகளின் படிப்பு குறித்து சான்றிதழ் உள்ளிட்டவற்றை எடுப்பதற்காக தமிழ்ச்செல்வி வந்துள்ளார்.
அப்போது, அவருக்கும் கணவர் செந்திலுக்கும் இடையே தகராறு வெடித்தது. இதில், ஆத்திரமடைந்த செந்தில் மனைவி என்றும் பாராமல் தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்தினார். இதனால் தமிழ்ச்செல்வி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காளையார்கோவில் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தமிழ்ச்செல்வியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த காவலாளர்கள் கொலையாளி செந்திலை தீவிரமாக தேடி வருகின்றனர்.