தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற கணவன் - மனைவி கைது...
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் தண்ணீர் பிடிப்பதில் இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் - மனைவியை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரி புதுக்குடியிருப்பு ரோச் தெருவை சேர்ந்தவர் மிக்கேல். தொழிலாளியான இவருடைய மனைவி ஹெலன் (48). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜன் (50). ராஜனின் மனைவி ரமணி என்ற ரமணிதேவி (49).
ஹெலனுக்கும், ரமணிக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ரோச் தெருவில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்ப மோட்டார் போட்டுவிடும் பொறுப்பை ஹெலன் கவனித்து வந்தார்.
கடந்த 1-7-2010 அன்று தெருவில் உள்ள தண்ணீர் தொட்டியில் ரமணி தண்ணீர் பிடிப்பதற்காக சென்றார். அப்போது தொட்டியில் தண்ணீர் இல்லை. அதைத் தொடர்ந்து தொட்டியில் தண்ணீர் நிரப்ப எதற்காக மோட்டார் போடவில்லை? என்று கூறி ஹெலனிடம், ரமணி தகராறு செய்துள்ளார்.
மேலும், ஹெலனின் உறவினர் மோட்டார் சைக்கிள் மீது கழிவுநீரையும் அவர் ஊற்றினார். இதனால் ஹெலனுக்கும், ரமணிக்கும் தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த ரமணி, தன் கணவர் ராஜனுடன் மறுநாள் ஹெலன் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த ஹெலனை, ரமணியும், ராஜனும் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வடசேரி காவலாளர்கள் வழக்கு பதிந்து ராஜன் மற்றும் ரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் விசாரித்து வந்தார்.
வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது ஜாமீனில் வெளியே வந்த ராஜன் திடீரென தலைமறைவாகிவிட்டார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் அவர் மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹெலன் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. ராஜன் தலைமறைவாக இருப்பதால், அவருடைய மனைவி ரமணி மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட ரமணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் தீர்ப்பளித்தார்.