தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டி நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் சாலை மறியல்…
திருச்சி
தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்று நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் துறையூர் - முசிறி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம் பொன்னுசங்கம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொன்னுசங்கம்பட்டி, தேவரப்பட்டி, கல்லிக்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகின்றனர்.
வாரம் ஒருமுறை என மூன்று கிராம மக்களுக்கும் வேலை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது பொன்னுசங்கம்பட்டி கிராம மக்கள் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று மழைப் பெய்ததால், அவர்களுக்கு வேலை தரப்படவில்லை. இதனால், நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள், தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி துறையூர் - முசிறி சாலையில் மறியல் செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த துறையூர் ஒன்றிய ஆணையர் பழனியப்பன், தாசில்தார் சந்திரகுமார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, தொடர்ந்து வேலைத் தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து தொழிலாளர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.
இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.