கந்து வட்டியால் தீக்குளித்த விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் 4 பேர் தீக்குளித்தம் சம்பவம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர், டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கந்துவட்டி கொடுமை காரணமாக நேற்று காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில், அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இசக்கிமுத்துவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு குடும்பமே தீக்குளித்ததற்குப் பிறகு கந்துவட்டி கொடுமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. கந்துவட்டி கொடுமையை தடுக்க வேண்டும் என்ற கருத்து உரக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளது. கந்துவட்டி தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
இந்த நிலையில் கந்து வட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 பேர் தீக்குளித்ததை அடுத்து, தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் த்தரவிட்டுள்ளது. அதிக வட்டி வசூலிப்பவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்றும் மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.