மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வேலூரில் மனித சங்கிலிப் போராட்டம்; 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...
வேலூர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வேலூரில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலிப் போராட்டம் நடைப்பெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அனைத்திந்திய உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வேலூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநிலத் தலைவர் ஜோதிகுமார் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலர் தண்டாயுதபாணி, துணைப் பொதுச் செயலர் அசரத்அலி, இளைஞரணி மாவட்டச் செயலர் மணிகண்டன், மகளிரணி செயலர் நாச்சிசேகர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அதெபோன்று, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு ஒருங்கிணைப்புக் குழு மாநிலப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பாலாறு பாதுகாப்பு சங்கத் தலைவர் ஜமுனா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விவசாயிகள், பல்வேறு சமூக நல அமைப்புகள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பேருந்து நிலையம் முதல் நியூடவுன் இரயில்வே கேட் வரையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.