How will you pay a salary for nine months - more than 200 women questioning the authorities?

விருதுநகர்

தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் ஒன்பது மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் சம்பளத்தை எப்போது தருவீர்கள் என்று கிராமசபை அதிகாரிகளை சுற்றிவளைத்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கேள்வி கேட்டனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சுந்தரராசபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த 300 பேரில் பெரும்பாலானோருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை.

இதில், சிலருக்கு மட்டும் கடந்த இரண்டு மாத ஊதியம் மட்டும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கும் மீதமுள்ள ஏழு மாத ஊதியம் நிலுவையில்தான் உள்ளது.

இந்த நிலையில் சுந்தரராசபுரத்தில் நேற்றுக் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பையா, வட்டார வள அலுவலர் முத்துமாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அதிகாரிகளிடம் ஊரக வேலைத்திட்டப் பயனாளிகள் ஊதிய நிலுவையைக் கேட்டுள்ளனர். இன்னும் 10 தினங்களுக்குள் ஊதியம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தனை மாதங்களாக கொடுக்கவில்லை, இப்போ மட்டும் எப்படி பத்து நாள்களுக்குள் தருவீர்கள் என்று கேள்விக் கேட்டு அவர்கள் சொன்னதை ஏற்க மறுத்தனர். அப்போது 200-க்கும் மேற்பட்ட பெண்கள் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வயது முதிர்ந்த நிலையில் உள்ள பெண்கள் கடந்த ஒன்பது மாதங்களாக ஊதியமின்றி மிகவும் சிரமப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் பேசியும் பயனாளிகள் சமாதானம் அடையாததால் கூட்டத்தை முடித்துக் கொண்டு அதிகாரிகள் வெளியேறினர்.

அதிகாரிகளின் இந்த செயல், அம்மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. உழைத்ததற்கு சம்பளம் கேட்டால் இப்படி பன்றாங்களே என்று அழுதுகொண்டே பெண்கள் அனைவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.