‘நீட்’ தேர்வைப் பொறுத்தவரை குதிரை பேரம் எங்கும் நடக்கலையாம் - தமிழிசை சொல்றாங்க...
கோயம்புத்தூர்
‘நீட்’ தேர்வை பொறுத்தவரை குதிரை பேரம் எங்கும் நடக்கவில்லை என்று கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தமிழிசை சௌந்திரராஜன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், “தமிழக அரசு கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சொன்னதால் மட்டுமே ‘நீட்’ தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வாய்ப்பு இல்லை.
உத்தரபிரதேச முதல் மந்திரி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் கூறியுள்ளார். ப.சிதம்பரம் போன்றவர்கள் அரசியலை விட்டே வெளியேற வேண்டும்.
பெப்சி தொழிலாளர்கள் போராடும்போது நடிகர் கமல்ஹாசன் ஏன் பேசவில்லை? சமூக வலைத் தளங்களில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் கருத்து சொல்வது சரியல்ல, அரசியலுக்கு வந்து பேச வேண்டும்.
‘நீட்’ தேர்வை பொறுத்தவரை குதிரை பேரம் எங்கும் நடக்கவில்லை. குதிரை பேரம் என்று சொல்லி ‘நீட்’ தேர்வை நடிகர் கமல்ஹாசன் கொச்சைப்படுத்துகிறார்” என்று அவர் கூறினார்.