அமித் ஷா சென்னை வருகையின் போது மின் வெட்டு ஏற்பட்டது ஏன்.? தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு உள்துறை நோட்டீஸ்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது மின் வெட்டு ஏற்பட்டது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமித்ஷா சென்னை வருகை
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொது கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 11ஆம் தேதி இரவு சென்னை வந்தார். விமான நிலையம் வந்த பாஜக முத்த நிர்வாகிகள் அமித்ஷாவை வரவேற்ற நிலையில் அமித்ஷா காரில் ஏறி நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டார். அப்போது சென்னை வந்த அமித்ஷாவிற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் சென்னை விமான நிலையம் அருகே கூடியிருந்தனர்.
திடீர் மின்வெட்டு- பாஜக போராட்டம்
விமான நிலையத்தில் இருந்து அமித்ஷா காரில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதன் காரணமாக விமான நிலையபகுதியே இருளில் மூழ்கியது. இதனால் தொண்டர்கள் அமிஷாவை பார்க்க முடியாத நிலை உருவானது. இருந்த போதும் அமித்ஷா காரில் இருந்து இறங்கி அமித்ஷா பாஜக தொண்டர்களை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனையடுத்து திடீரென ஏற்பட்ட மின்வெட்டிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக தொண்டர்கள் விமான நிலையம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பாஜகவினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.
தமிழக அரசுக்கு உள்துறை நோட்டீஸ்
அதே நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வருகின்ற பொழுது மின்வெட்டு ஏற்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக மின்வாரியம் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது. அதில் மின் பழுது காரணமாக திடீரென மின்வெட்டு ஏற்பட்டதாகவும் உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உள்துறை அமைச்சரின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மின்வெட்டு ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து சென்னை மின் நிலையத்தில் அமித்ஷா வரும் பொழுது மின்வெட்டு ஏற்படுவது காரணம் என்ன என அறிக்கை அளிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு உள்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
என்ன நடந்தாலும் பாஜக, பாமகவோடு எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது- அடித்து கூறும் திருமாவளவன்