சீமைக்கருவேல மரங்களை அகற்ற 2 மாதம் கெடு - உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி கடந்த சில நாட்களுக்கு முன் மதிமுக பொது செயலாளர் வைகோ உள்பட 6 பேர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாநிலம் முழுவதும் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில், இதுவரை 10 சதவீதம் சீமைக்கருவேல மரங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. மற்றவைகளை அகற்ற அதிகாரிகள் முன் வரவில்லை என கூறினர்.
இதையடுத்து நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்களை அகற்ற 15 நாட்களில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், ஒருசில கலெக்டர்கள், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் சரியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என அதிருப்தி அடைந்ததுடன், கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை 2 மாதத்தில் அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.