நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறபித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்குடியிருப்பில் உள்ள ‘நியூ தியேட்டர்’ உரிமையாளர் சி.டேவிட் என்பவர் சென்னை 10-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உரிமையியல் நிதிமன்றம் இந்த உத்தரவை இட்டுள்ளது.

‘நியூ தியேட்டர்’ உரிமையாளர் சி.டேவிட் தாக்கல் செய்த மனுவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தாணு தனக்கு 2 லட்சம் ரூபாய் தரவேண்டும். ஏற்கனவே நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிமன்றம் 2 லட்சம் ரூபாயும் அதற்குரிய வட்டி தொகையையும் சேர்த்து கலைபுலி தாணு வழங்கவேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந் உத்தரவிட்டுள்ளது.

 ஆனால், தாணு பணத்தை வேண்டுமென்றே வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரது பெயரில் சொத்துக்கள் சென்னையில் உள்ளன. தற்போது பல கோடி ரூபாய் செலவு செய்து ‘கபாலி’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். எனவே, வசதி இருந்தும் பணம் தராத தாணுவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கவேண்டும்’ என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கணேசன் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, கலைபுலி தாணுவை வருகிற 28-ந் தேதிக்குள் போலீசார் கைது செய்ய பிடிவாரண்ட் பிறபித்து உத்தரவிட்டார். மேலும் விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.