கீழடி ஆய்வு: மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கீழடியில் 4 ஆம் கட்ட அகழாய்வை தொடங்க மத்திய தொல்லியல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 5,300 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருட்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. ஆனால் ஒரு ஏக்கர் பரப்பளவில் தான் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
கீழடியில் அகழாய்வு பணியை தொடரவும், பழங்கால பொருட்களை கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
மேலும், கீழடி 3 ஆம் கட்ட அகழாய்வு பணியில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் மனுவில் கூறியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. விசாரணையின்போது கீழடி 4 ஆம் கட்ட அகழாய்வு பணிக்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கீழடி 4 ஆம் கட்ட அகழாய்வு பணிக்காக 2 வாரத்தில் அனுமதி வழங்க மத்திய தொல்லியல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.