பலத்த மழைக்கு பலியான விளை நிலங்கள்; நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிய சோகம்…
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளநீரால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பலியாயின.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கி பல்வேறு இடங்களில் பலத்த மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் உள்ள பொறை வாய்க்கால் புதுமண்ணியாறு, தெற்குராசன் வாய்க்கால்களில் மழைநீர் கரைபுரண்டு ஓடும் அளவுக்கு கடந்த நாள்களாக பலத்த மழை பெய்தது.
இதில், பொறைவாய்க்கால் கரையில் விநாயகக்குடி, கடவாசல் ஆகிய பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால், 5000 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பு பயிர்கள் நீரில் மூழ்கின.
மேலும், எடமணல், வேட்டங்குடி, ஆமப்பள்ளம், வழுதலைக்குடி, அரசூர், கார்குடி, புத்தூர், அளக்குடி, மகேந்திரப்பள்ளி, உமையாள்பதி, ஆரப்பள்ளம், ஆச்சாள்புரம் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் சம்பா சாகுபடி செய்யப்பட்டன. அவையனைத்தும் ஒட்டுமொத்தமாக மழைநீரில் மூழ்கியுன.
பலத்த மழை பெய்து ஏற்பட்ட வெள்ளத்தால் விளைநிலங்கள் பலியானதால் விவசாயிகள் அனைவரும் பெரும் சோகத்தில் உள்ளனர்.