ராஜபாளையத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை; இடி விழுந்து பசு மாடு பரிதாபமாக பலி -
விருதுநகர்
ராஜபாளையத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தபோது இடி விழுந்ததில் பசு மாடு ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் மக்கள் வாடி வதங்கினர்.
பகல் நேரங்களில் அனல் காற்று வீசி மக்களை வீட்டுக்குளேயே புழுங்க வைத்து எரிச்சல் ஊட்டியது. வேலைக்காக வெளியே வரும் மக்களும் வெயிலின் சூடு தாங்க முடியாமல் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தில் நேற்று மாலை அரை மணி நேரம் இடைவிடாது பெரும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
அப்போது, மாசாணியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் என்ற விவசாயி தனது வீட்டின் அருகே மரத்தடியில் பசு மாட்டினை கட்டியிருந்தார்.
பெரும் இடி ஒன்று மரத்தின் மீது விழுந்ததில் அருகில் கட்டப்பட்டிருந்த பசு மாடும் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
வெயிலில் வாடி வதங்கிய மக்களுக்கு மழை பெய்ததால் சந்தோஷப்படுவதா? அல்லது இடி விழுந்து மாடு இறந்து போனதே என்று வருத்தப்படுவதா? என்று தெரியாமல் சோகத்தில் மூழ்கினர்.