தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய,விடிய கொட்டித் தீர்த்த மழை… இன்னும் 2 நாளைக்கு வெளுத்து வாங்கப் போகுது!!
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல இடங்களில் நேற்று இரவி தொடங்கிய மழை விடிய,விடிய கொட்டித் தீர்த்தது. அதே நேரத்தில் வட தமிழகம் மற்றும் கொங்கு மண்டலம் பகுதிகளில் இடுத்த நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வி மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது..அதுபோல் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்துள்ளது.
ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால், வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரண்டு மணிநேரமாக பெய்த மழையால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், எரியோடு, கோவிலூர் குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. சேலம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.
தற்போது மிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியின் முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், விராம்பட்டிணம் போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து, ஈரப்பதமான கடற்காற்று வீசுகிறது. இந்த காற்று, தென் மாநிலங்களில் சந்திப்பதால், தமிழகத்தில் பல இடங்களில், இன்று பரவலாக மழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில், மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள பன்னார்காட்டா சாலை, எலக்ட்ரானிக் சிட்டி, நாகர்பாவி, எஸ்வந்த்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பிரதான சாலைகளிலும், தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.