சேலத்தின் பல பகுதிகளில் கனமழை; நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி...
சேலத்தில் உள்ள எடப்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெகுநாட்களுக்கு பிறகு மழை பெய்துள்ளது. அரை மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது.
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. போன வருடம் மழைப் பொய்த்துவிட்டதே என்று வாடிய பகுதிகள் எல்லாம் இந்த வருட மழைப் பொழிவால் சற்று ஆறுதல் அடைந்துள்ளன.
தொடர்ந்து பெய்துவரும் மழையால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்குத் தேவையான மழையையும், பொதுமக்கள் நிலத்தடி நீராய் சேகரித்து தங்களது தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளவும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, சேலம் மாவட்டம், எடப்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. பகல் முழுவதும் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் முதலில் மேகமூட்டம் காணப்பட்டது. பின்னர் இதே நிலைத் தொடர்ந்த் குளிர் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.
இந்த மழை பூலாம்பட்டி, மொரப்பட்டி, பில்லுக்குறிச்சி ஆகிய பகுதிகளில் அரை மணிநேத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளிலும் வெள்ள நீர் ஓடியது. வெகு நாட்களுக்கு பிறகு பெய்த இந்த மழையால் இதமான சூழல் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் உள்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.