குரங்கணி காட்டுப்பகுதியில் கொட்டித் தீர்த்த மழை… 2 நாட்களுக்கு முன் பெய்திருக்கக் கூடாதா என பொது மக்கள் வேதனை!!
12 பேரை பலி கொண்ட குரங்கணி வனப்பகுதியில் நேற்று கன மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை 2 நாட்களுக்கும் முன் பெய்திருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்குமே என அப்பகுதி பொது மக்கள் வேதனை தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 39 பேரில் 12 பேர் தீயில் கருகி பலியாகினர். மேலும் சிலர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்து நடந்த வனப்பகுதியில் உதவி வனப் பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில் 20 பேர் கொண்ட வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மலையேற்ற பயிற்சி மேற்கொண்ட பகுதியில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், மேலும் இறந்தவர்களின் உடல்கள் எடுத்து வர பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர்.
மீட்பு பணியின் போதும் தீ எரிந்து கொண்டே இருந்ததால் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இருந்தபோதும் தீ முற்றிலும் அணையாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை முதல் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தீ விபத்து நடந்த குரங்கணி வனப்பகுதியிலும் மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் கன மழையாக கொட்டித் தீர்த்தது.
இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பற்றி எரிந்த காட்டுத் தீ முற்றிலும் அணைந்தது. இதனால் தீ விபத்து நடந்த எந்த தடயமும் தெரியாத அளவுக்கு வனப்பகுதி தற்போது ரம்யமாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் தற்போது பெய்யும் இந்த மழை 2 நாட்களுக்கும் முன் பெய்திருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்குமே என அப்பகுதி பொது மக்கள் வேதனை தெரிவித்தனர்.