தருமபுரியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த மழை; வெயிலில் வதங்கிய மக்கள் குளிர்ச்சியால் மகிழ்ச்சி...
தருமபுரி
தருமபுரியில் ஒரு மனிநேரத்திற்கும் மேலாக நீடித்த இடி மின்னலுடன் பெய்த மழையால் நகரமே குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில், கோடை தொடங்கியதிலிருந்து வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் பல நாள்களாக 100 டிகிரியை தாண்டியே வெப்பம் வெளுத்து வாங்கியது.
மேலும், சில நாள்களில் 103 முதல் 105 டிகிரி வரையிலும் வெயில் பதிவானதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து மக்கள் கடுமையாக அவதி அடைந்தனர்.
இந்த நிலையில், கத்திரி வெயில் தொடங்கியதிலிருந்து வெயில் அளவானது 100 டிகிரியிலிருந்து சுமார் 98 டிகிரி முதல் 96 டிகிரி வரையும் குறைந்தது. மேலும், அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக இடி, மின்னலுடம் மழை பெய்து வருகிறது.
இதன்படி, தருமபுரியில், நேற்று காலை முதல் நண்பகல் வரை வெயில் அளவு 96.2 டிகிரி ஆக பதிவாகியிருந்தது. இதைத் தொடர்ந்து, மாலை நேரம் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், இடி, மின்னலுடன் தருமபுரி நகரம் முழுவதும் மழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையால், எஸ்.வி.சாலை, நான்கு முனைச் சாலை, நேதாஜி புறவழிச்சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
மேலும், தீடீரென பெய்த இம்மழையால் வெப்பம் தணிந்து நகரத்தில் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. இதனால், மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.