Asianet News TamilAsianet News Tamil

#BREAKING:கனமழையினால் 7 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

தொடர் மழை காரணமாக, தமிழகத்தில் நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
 

Heavy Rain Alert
Author
Tamil Nadu, First Published Nov 28, 2021, 6:40 PM IST

தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழை பெய்யும் அளவை பொருத்தும் பாதிப்புகளை பொறுத்தும் மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழையையொட்டி, பெய்து வரும் கனமழையினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூரில் தொடர் மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், வரும் 30 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுக்குறித்து விடுத்த அறிக்கையில்,  இன்று கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் நாளை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

30.11.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

01.12.2021: தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

02.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதி, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ராமநாதபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios