கருப்பு பேட்ஜ் அணிந்து மாணவர்களுக்கு பாடம் நடத்திய கௌரவ விரிவுரையாளர்கள்…
நீலகிரி
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.
தமிழ்நாடு கௌரவ விரிவுரையாளர்கள் நலச் சங்கத்தினர், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஊட்டி அரசுக் கலைக் கல்லூரியில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைச் செயலாளர் நந்தகுமார் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் பங்கேற்ற கௌரவ விரிவுரையாளர்கள் கருப்புப் பட்டை அணிந்திருந்தனர்.
இதுகுறித்து மாவட்டத் துணைச் செயலாளர் நந்தகுமார் கூறியது:
“அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் பணியாற்றி வரும் அனைத்து கௌரவ விரிவுரையாளர்களையும் சிறப்புத் தேர்வின் மூலம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
எங்களது கோரிக்கைகளை அரசு இதுவரை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு அரசு பண பலன்கள் வழங்கப்படவில்லை.
எனவே, கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தர வாய்ப்பு பெறாமலேயே பணி ஓய்வு பெறும் சூழ்நிலை உள்ளது. அதன் காரணமாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்” என்று அவர் கூறினார்.
கவன ஈர்ப்பு போராட்டம் நடத்திய பின்பு வகுப்புகளுக்குச் சென்ற கௌரவ விரிவுரையாளர்கள் கருப்புப் பட்டை அணிந்துக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.