GSt for petrol and diesel tamilnadu State Government will continue to oppose ops

தேனி

ஜெயலலிதாவை எதிர்த்த பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் கொண்டுவரும் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து எதிர்க்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (50). இவர், தேனி மாவட்ட அ.தி.மு.க. வழக்குரைஞர் பிரிவு இணை செயலாளராக உள்ளார்.

நேற்று காலையில் இவர், பெரியகுளத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்காக தேனியில் இருந்து ஒரு காரில் புறப்பட்டுச் சென்றார். அந்த காரை பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த தீபன்சக்கரவர்த்தி (29) ஓட்டினார். காரில், தேனி சுந்தரம் திரையரங்கம் தெருவைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (35) என்பவரும் பயணம் செய்தார்.

இந்த கார், தேனி - பெரியகுளம் சாலையில் மதுராபுரி அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது, காருக்கு முன்னால் மதுராபுரியை சேர்ந்த பாண்டியராஜ் (62) ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருருந்தார். அவர் திடீரென மோட்டார் சைக்கிளில் வலதுபக்கம் திரும்பியதால் பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கார் மற்றும் பைக் அருகில் இருந்த ஓடை பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் இருந்த கிருஷ்ணகுமார், தீபன்சக்கரவர்த்தி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பாண்டியராஜ் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக் காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணகுமாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் கொண்டு வரும் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து எதிர்க்கும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் உரிமை மத்திய அரசிடம்தான் இருக்க வேண்டுமே தவிர, பெட்ரோலிய நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என்று கூறியிருந்தார். அதனுடைய பாதிப்பு தற்போதுதான் தெரிகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேவையான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.