அனிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும்... வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்சநீதிமன்றத்தில் மனு...
நீட் தேர்விற்கு தடைவிதிக்க கோரி உச்ச நீதி மன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா, தற்கொலை செய்துக்கொண்டார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதாவிற்கு ஆதரவாகவும், நீட் தேர்வை எதிர்த்தும் போராட்டங்கள் வலுத்து வருகிறது.
மாணவர்கள், பொதுமக்கள், சில அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைவரும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அனிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அனிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்றும், சி பி எஸ் சி பாடத்திட்டத்திற்கு நிகரான கல்வி முறையை தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் எனவும், நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டில் தற்போது போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என கூறி, சென்னையில் பல் வேறு இடங்களில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லயோலா கல்லூரி முதல் நந்தனம் கல்லூரி உட்பட பல கல்லூரி மாணவர்கள் நீதி வேண்டும்... நீதி வேண்டும்... மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதிவேண்டும் என கூறி தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி அனிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.