greater chennai scheme inaugurated today by cm edappadi
விரிவாக்கப்பட்ட சென்னை மாவட்டத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முறைப்படி தொடங்கி வைத்தார். வெகு நாட்களாகவே இது பரிசீலனையில் இருந்தது. இந்நிலையில் இன்று முறைப்படி இந்தத் திட்டம் முதல்வர் பழனிசாமியால் துவங்கி வைக்கப் பட்டது.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (4.1.2018) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 67 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி, மொத்தம் 122 வருவாய் கிராமங்களுடன் 426 ச.கி.மீ., ரப்பளவில் 3 வருவாய் கோட்டங்கள், 16 வட்டங்களை உள்ளடக்கிய பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தை துவக்கி வைத்தார்.
இதன்படி, விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம், தண்டையார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு,
வடசென்னை கோட்டம் - திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களுடன் 32 வருவாய் கிராமங்களைக் கொண்டதாகவும்,
அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு மத்திய சென்னை கோட்டம் - அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களுடன் 47 வருவாய் கிராமங்களைக் கொண்டதாகவும்,
கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு தென் சென்னை கோட்டம் - கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களுடன் 43 வருவாய் கிராமங்களைக் கொண்டதாகவும் அமையும்.
இதன்மூலம், விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம் பெருநகர மாநகராட்சி எல்லைக்கு இணையாக அமையும். விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மருத்துவ வசதிகள், மாவட்ட வேலைவாய்ப்பகங்களில் பதிவு, கல்வி தொடர்பான பணிகள், பேரிடர் மேலாண்மை தொடர்பான அரசின் நலத்திட்ட உதவிகள், தேர்தல் தொடர்பான பணிகள், சட்டம் மற்றும் ஒழுங்கு சார்ந்த பணிகள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், நிலம் தொடர்பான பணிகள் மற்றும் நலத்திட்டங்களை எளிதில் விரைவாகப் பெற முடியும் என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
