மேலூர்- கிரானைட் குவாரிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு ரூ.454.48 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2 நிறுவனங்கள் மீது இன்று மேலூர் நீதிமன்றத்தில் 1340 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம், மேலூரை சுற்றி உள்ள கீழவளவு, இ.மலம்பட்டி, திருவாதவூர், ஒத்தக்கடை பகுதியில் பல்வேறு கிரானைட் குவாரிகள் இயங்கி வருகின்றன.

இவை பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக மொத்தம் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்குகளில் ஏற்கனவே 65 வழக்குகளில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கீழவளவு காவல் நிலையத்தில், பாறை புறம்போக்கு இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கே.எம்.சோலைராஜன், பிஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 29 பேர் மீது வழக்கு பதிவானது.

இதையடுத்து இன்று மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அரசுக்கு 448.95 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக 910 பக்க குற்றபத்திரிகையை அரசு வழக்கறிஞர் ஷீலா தாக்கல் செய்தார்.

மற்றொரு குற்றப்பத்திரிக்கை ஒத்தக்கடை காவல் நிலையத்தில், இடையபட்டியில் உள்ள கண்ணனேந்தல் குளத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் லட்சுமி மற்றும் 10 பேர் மீது அரசுக்கு 5.53 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 430 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கலானது.

இந்த இரண்டு கிரானைட் நிறுவனங்கள் மீதும் மொத்தம் ரூ.454.48 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக 1340 பக்க குற்றப்பத்திரிக்கை மாஜிஸ்திரேட் செல்வகுமார் முன்னிலையில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது.