அரசு ஊழியர்கள் வேலை நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள் வேலை நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு வேலை பெற இளைஞர்கள் உள்பட பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அரசு வேலை என்றாலே பணி சுமை இருக்காது என்றும் கை நிறைய சம்பளம் என்றும் மக்கள் மத்தியில் ஒரு எண்ணம் உள்ளது. அதேசமயத்தில் அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் சரிவர பணிகளை மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாகவும் மக்கள் மத்தியில் ஒரு கருத்தும் நிலவி வருகிறது. இந்த நிலையில் திருச்சி சுகாதார மண்டலத்தில் பணி கண்காணிப்பாளராக பணியாற்றும் ராதிகா என்பவர், வேலை நேரத்தில் தன்னுடன் பணி புரியும் ஊழியரை செல்போனில் வீடியோ எடுத்ததால் அவர் பணியிடை நீக்கம் செய்ய்ப்பட்டார்.

அதை எதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ராதிகா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னுடைய பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில் பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் சொந்த வேலைக்காக கைபேசி பயன்படுத்தத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன்கள் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதை தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர் செல்போன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். அலுவலக நேரத்தில் செல்போன் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்திய வீடியோ எடுப்பது தொடர்பான விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ள அவர், அரசு ஊழியர் விதிப்படி வழிகாட்டுதல்களை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்தியாவசிய மற்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது நல்ல நடவடிக்கை அல்ல என்பதை குறிப்பிட்டுள்ள நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம், 4 வாரங்களில் இந்த உத்தரவை நிறைவேற்றவும் ஆணையிட்டுள்ளார்.